தமிழீழத்தின் மூத்த இசைக்கலைஞர்களில் ஒருவர்தான் எங்கள் பேரன்பிற்குரிய ஜெயராம் அண்ணா.”வயலின் ஜெயராம்”என்றால் ஈழத்தில் தெரியாதவர்களே இல்லை எனலாம். அவரது இழப்பானது ஈடுசெய்யமுடியாத ஒன்று.யாழ்ப்பாணத்தில் நடைபெறும்.
இசைநிகழ்வுகளில் நடனங்கள்,நாடகங்கள்,வாய்ப்பாட்டுக்கச்சேரிகள்,இன்னும்பல)பெரும்பாலும் இவரே வயலின் இசையை வழங்குவார்.பட்டிதொட்டியெங்கும் இசைத்த அவர் வயலின் தமிழீழவிடுதலைக்காகவும் இசைத்தது.
தமிழீழத்தில் எழுச்சிப்பாடல்கள் உருவாகத்தொடங்கியபோதே ஜெயராம் அண்ணா எழுச்சிப்பாடல்களுக்கு வாசிக்கத்தொடங்கிவிட்டார்.அதுதவிர “கொடியோரின்கொடுமை,சீதன அம்புகள் போன்ற நாட்டியநாடகங்களில் வயலின் இசைத்தவர். அத்துடன் பல எழுச்சி நிகழ்வுகளுக்கும் இவர் இசைவழங்கியிருக்கிறார்.”செஞ்சோலை” இல்லத்தின் வளர்ச்சிநிதிக்காக “செஞ்சோலை இசைமாலை” எனும் இசைநிகழ்வு யாழ்மாவட்டத்தின் 16 இடங்களில் மேடையேற்றப்பட்டது.தமிழீழத்தேசியத்தலைவரின் எண்ணத்திற்கமைவாக பல கவிஞர்களால் எழுதப்பட்ட பாடல்களுக்கு இசைவாணர் கண்ணன் ஐயா அவர்களின் வழிகாட்டலில் அவரின் மகன் திரு.முரளி அவர்கள் இசைவழங்க பல இசைக்கலைஞர்கள் அணிசெய்ய போராளிகள் சிலரும் செஞ்சோலைப்பிள்ளைகளும் பாடல்களைப்பாடியிருந்தார்கள்.அந்த இசைக்கலைஞர்களில் ஒருவர் எங்கள் ஜெயராம் அண்ணா.மிகவும் அன்பாக ஆர்ப்பாட்டம் ஏதுமின்றி கலகலப்பாகப் பழகுவார்.கலைபண்பாட்டுக்கழகத்தின் நிகழ்வுகளுக்கும் இசைப்பணி புரிந்தவர்.எமது தேசிய மாவீரர் பாடலான “மொழியாகி எங்கள் மூச்சாகி நாளை” என்ற பாடலுக்கும் வயலின் இசைவழங்கியவர் அவரே.இன்னும் பல பாடல்களில் அவரின் வயலின் இசை விடுதலையின்பால் எம்மைஈர்த்து நிற்கிறது என்றால் மிகையல்ல.எளிமையான கலைஞர்.பல ஆண்டுகளாகயாழில் மாணவர்கள் பலருக்கு வயலின் கற்றுக்கொடுத்துக்கொண்டிருக்கும் நல்ல ஆசானாகத் திகழ்பவர்.அவருடன் பழகியநாட்களின் பசுமையான நினைவுகளில், விடுதலைப்பயணத்தின் கலைப்பணி ஆற்றியவர்களில் ஒரு அரிய கலைஞராக அவர் எம்முடன் வாழ்ந்துகொண்டேயிருப்பார்.தமிழீழம் அவருக்கான மதிப்பார்ந்த இடத்தினைத் தனக்குள்ளே பதிந்துள்ளது. அவரின் உயிர் அமைதிபெற உளமார வேண்டுகிறோம்.🙏🙏🙏
கி.மணிமொழி